125x125 Ads1

125x125 Ads1

Thursday, April 1, 2010

அழைப்பு பணியின் அவசியம்

மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக்கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும்பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும் தீமையை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.

மக்கள் நன்மைகளை விட்டும் வெகு வேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்ப சுகம், உலகாதாயம் என்பவற்றில் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, வட்டி, ஹராம் என்பது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையாகும். இந்த வட்டியின் பக்கம் வாருங்கள் என தொலைக்காட்சி, வானொலி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் அழைப்பு விடுக்கின்றன. பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், இனிப்பான திட்டங்கள் என அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு தீமைகள் புயலாக விசும்போது உண்மை இறைவிசுவாசி தானுண்டு தன் பாடுண்டு என்று இருக்கமுடியுமா? அவர்களது உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள், ஊரார் அனைவரும் அழிவின்பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கும் போது, இவர் கண்டு கொள்ளாமல் இருப்பது அறிவுக்கு பொருந்துமா?

இதனை பின்வரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன. ‘ சுலைமான் (அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது, ஒரு எறும்பு தனது மற்ற எறும்பு கூட்டங்களைப் பார்த்து, ”எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களை திண்ணமாக மிதித்து விட வேண்டாம். 27:18 எனக்கூறியது.

இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக்கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கரையை உணரமுடிகிறது. ஓர் எறும்பே சமூக உணர்வுடன் நடந்திருக்கும்போது, எமது சகோதர சகோதரிகள் ஷிர்கிலும் பித்அத்துக்களிலும், ஹராத்திலும் மூழ்கியிருக்கும் போது இந்த செயல்கள் மூலம் தம்மைதாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும்போது நாம் தடுக்காது இருக்கலாமா? அப்படியிருந்தால் இந்த எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா சென்றிடுவோம்.!

இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான் (அலை) அவர்கள் தனது படையை பார்வையிட்டுக் கொண்டு வருகிறார்கள். அங்கே ஹுத் ஹுத் என்ற பறவையைக் காணவில்லை. அது தாமதித்து வந்தது. இந்தப் பறவை தாமதித்து வந்ததற்கான காரணத்தை கூறாவிட்டால், அதை அறுத்து விடுவேன் அல்லது கடுமையாக தண்டிப்பேன் என்று கோபத்தோடு கூறுகிறார்கள். அப்போது அந்தப்பறவை சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறியது. அதை அல்லாஹ், திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

‘அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து; ”நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார். ”நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார். (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று, ”தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். ‘ஸபா’விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.” ”நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. ”அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. ”வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? ”அல்லாஹ் – அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று). 27:20-26

இந்தச் செய்தியை கேட்டபின், அந்தப் பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் தஃவா செய்து, அவர் இஸ்லாத்தில் இணைந்ததாக அல்குர்ஆன் கூறுகின்றது.

”இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள். 27:44

ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதை கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. நமது சகோர சகோதரிகள் பலர் அறியாமல் கப்ரு வழிபாட்டிலும் ஷிர்க்கான சடங்குகளிலும் மூழ்கியுள்ளனர். இவற்றால் அவர்கள் செய்கின்ற நல்லமல்களை அழித்துக் கொள்வதுடன் தம்மைத்தாமே நரகிற்கு தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனை கண்டு எமக்கு சிறிதளவாவது கவலை வரவில்லையென்றால் நாம் இந்தப்பறவையை விட கீழானவர்களாக அல்லவா இருப்போம்.!

ஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக்கப்படுவதை தாங்கிக் கொள்வதில்லை. இவன் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி வெறிகொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹ்விற்கு அநீதி இழைக்கப்படுகிறது அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரகங்மாக மீறப்படுகின்றன, அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்னதொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்த பட்சம், முகச்சுழிப்பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறதெனில் இவனது இறைவிசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.

அல்லாஹ்வை முஸ்லிம்களாகிய நாம் ஈமான் கொண்டுள்ளோம். நாம் சத்திய போதனையில் ஈடுபடும்போதுதான் எமது ஈமான் ஏனைய சமூகங்களைவிட சிறப்புப் பெற்றிருக்கின்றோம். இதனை அல்குர்ஆன் தெளிவாக கூறுகின்றது.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராகவும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். 3:110

இந்தவகையில் இஸ்லாத்தை இதயத்தில் ஏற்று அதை பிறருக்கும் எடுத்து கூறும்போதுதான் ஒருவன் இஸ்லாம் என்ற கொள்கையில் பற்றுடையவனாக இருக்கமுடியும். அல்லாஹ்வின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் தராதரத்தை மதிப்பிடும் சாதனமாக இந்த அழைப்பு பணி அமைந்துள்ளது.

No comments:

Post a Comment